வணக்கம். என்னுடைய இரண்டாவது கவிதை நூல் “தமிழர் திருநாள்” சார்பாக உங்களை தொடர்பு கொள்வதில் மகிழ்ச்சியடைகின்றேன். என்னுடைய படைப்புகளுக்கு கடந்த சில ஆண்டுகளாக நீங்கள் அளித்து வரும் ஆதரவுக்கும், அன்புக்கும் இத்தருணத்தில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
நான் கவிதைகளை தொடர்ச்சியாக எழுதி வெளியிடுவதற்கு உங்களைப் போன்ற, இணையத்தள நண்பர்கள் அளிக்கும் முழுமையான ஆதரவே உற்சாகமூட்டுகின்றது. தாயகத்தை விட்டுப் புலம்பெயாந்து எங்கு வாழ்ந்தாலும் அதனுடைய வலிகளை வார்த்தைகளில் வடிக்க முடியாது, உற்று உணர்ந்து வலிகள் சுமந்து வாழவே முடிகிறது.
நூல்வெளியீடு: தமிழர் திருநாள் (தாயகக் கவிதைகள்)
இடம்: நோர்வே அருள்மிகு சிவசுப்பிரமணியர் ஆலயம்
திகதி: 14.01.2009 புதன்கிழமை மாலை 20:30-21:00 மணிக்கு (30 நிமிடங்கள்)

தமிழர்களுக்கு ஒரு நாள் அது தமிழால் அடையாளப் படுத்தக்கூடிய தமிழர் வாழ்வை, என் சார்பாகவும் அதன் வலிகள், துக்கங்கள், சோகங்கள் அவலங்கள், ஏக்கங்கள், சுகங்கள், அழகுகள் குறையாமல் பதிவுசெய்ய முயற்சி செய்திருக்கின்றேன்.
தாய்நாட்டில் எத்தனையோ இன்னல்கள், அவலங்களுக்குள் மத்தியில் வாழ்ந்தாலும் மிக இயல்பாக விடுதலைப் பெருமூச்சை சுமந்து கொண்டிருக்கும், என் தமிழ் மக்களுக்கும் போரளிகளுக்கும் எம் வானில் ஒளிர்கின்ற சூரியனுக்கும் இந்த தமிழர் திருநாள் கவிதைத் தொகுப்பை வழங்குகின்றேன்.
ஆகவே என்னுடைய இந்த நூல் பற்றிய அறிமுகத்தை எமது மக்களுக்கும் கொண்டு சேர்ப்பதில் நீங்கள் பெரும் பங்கு ஆற்றுவீர்கள் என்ற நம்பிக்கையில் இந்தக் கடிதத்தை இங்கே பதிவுசெய்கின்றேன்.

இந்த கவிதைத் தொகுப்பை தழிழ்நாட்டில் உள்ள காந்தளகம் பதிப்பகம் வெளியீடு செய்திருக்கின்றது. என் நட்பிற்குரிய தோழமை பதிப்பகத்தார் இதனை விற்பனை செய்வதற்கும் பல வழிகளிலும் உதவி புரிந்துள்ளார்கள் என்பதை உங்களுக்குத் தெரியப்படுத்துவதில் மகிழ்வடைகின்றேன். தமிழகத்தில் ஏற்கனவே விற்பனைக்கு வந்துவிட்டது என்பதையும் மகிழ்ச்சியோடு பதிவுசெய்கின்றேன்.
இந்த நூல் வெளியீட்டு நிகழ்வு மிகவும் எளிமையான முறையில் நடைபெறுகின்றது.
உங்கள் அனைவரின் அன்பையும், ஆதரவையும் வேண்டி நிற்கின்றேன். உங்கள் ஒத்துழைப்பிற்கு நன்றிகள்.
என்றும் அன்புடன்
வசீகரன்.சி
ஒசுலோ, நோர்வே 12.01.2009
ஆலயத்தில் 19:00 மணிக்கு இடம்பெறும் விசேட பூசைகள் நிறைவுபெற்ற பின்பு நிகழவுள்ளது.
http://tamil.cinesouth.com/masala/hotnews/...2012009-4.shtml

